தமிழக சட்டப்பேரவையை முடக்க நினைக்கும் எடப்பாடி பழனிசாமியின் பகல் கனவு நிச்சயம் பலிக்காது என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பேரூராட்சிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் இன்று நடைபெற்றது. அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.
இதையும் படிக்க- 'தோனிக்கு நன்றி': 14 கோடிக்குத் தேர்வான தீபக் சஹார்
அப்போது பேசிய அவர், திமுகவின் முறைகேடுகள் தொடர்ந்தால் மேற்கு வங்கத்தை போல தமிழகத்திலும் சட்டப்பேரவையை முடக்கும் நிலை ஏற்படுமென ஆவேசத்துடன் தெரிவித்தார். இதற்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, தமிழக சட்டப்பேரவையை முடக்க நினைக்கும் எடப்பாடி பழனிசாமியின் பகல் கனவு நிச்சயம் பலிக்காது.
அத்தைக்கு மீசை முளைக்கட்டும், பின் சித்தப்பா என பெயர் வைக்கலாம். எடப்பாடி பழனிசாமி பேச்சு அவரது அறியாமையை காட்டுகிறது. அதிமுகவின் ஆசையை மத்திய அரசுக்கு தனது பேச்சு மூலம் எடப்பாடி பழனிசாமி தெரியப்படுத்தியுள்ளார். முடக்கினால்தான் அடுத்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி என அதிமுக எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.