முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை அரசு விட்டுக் கொடுக்கக் கூடாது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
இது தொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: முல்லைப் பெரியாறு அணை தமிழகத்துக்குச் சொந்தமானது என்பதும், அதன் பராமரிப்புப் பணியை தமிழக அரசு மேற்கொண்டு வருவதும் மறுக்க முடியாத உண்மை. ஆனால், கேரள அமைச்சர்களும், அதிகாரிகளும் வந்து தண்ணீர் திறந்துவிடுவதும், அணையை ஆய்வு செய்வதும், மதகுகளின் கதவுகளை மேற்பார்வையிடுவதும் என பல நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். இதை தமிழக அரசு கண்டும் காணாமல் வேடிக்கை பார்ப்பது கடும் கண்டனத்திற்குரியது.
கேரள அரசின் இதுபோன்ற தன்னிச்சையான நடவடிக்கை முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும். கேரள அரசின் இதுபோன்ற நடவடிக்கைகளை கண்டும் காணாமல் இருப்பது பின்னாளில் அந்த மாநில அரசு உரிமை கோர வழிவகுத்துவிடும் என்றும் விவசாயிகள் கூறுகின்றனர். இந்த விவகாரத்தில் முதல்வர் தனிக் கவனம் செலுத்தி, முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.