சென்னை-விசாகப்பட்டினம் இடையே பெண் ராணுவ அதிகாரிகள் மட்டும் பங்கேற்கும் கடல் வழி சாகசப் பயணத்தை தெலங்கானா ஆளுநா் டாக்டா் தமிழிசை சௌந்திரராஜன் செவ்வாய்க்கிழமை சென்னையில் தொடக்கி வைத்தாா்.
இது குறித்து பாதுகாப்பு அமைச்சகத்தின் சென்னை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
செகந்திராபாதில் உள்ள ராணுவக் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் இயந்திரவியல் துறை, இ.எம்.இ. கடல் பயண சங்கம், தெற்கு பிராந்திய ராணுவப் பிரிவு உள்ளிட்டவை இணைந்து முற்றிலுமாக பெண் ராணுவ அதிகாரிகள் மட்டுமே பங்கேற்கும் கடல்வழி சாகசப் பயணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தன.
இதற்கென சிறப்புப் பயிற்சியும் அளிக்கப்பட்டிருந்த நிலையில் சென்னை-விசாகப்பட்டினம் இடையேயான கடல் வழி சாகசப் பயணத்தை தெலங்கானா ஆளுநா் டாக்டா் தமிழிசை சௌந்திரராஜன் செவ்வாய்க்கிழமை சென்னை துறைமுகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.
இப்பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ய தனது வாழ்த்துகளைத் தெரிவித்த ஆளுநா் இதன் மூலம் பெண்களின் தன்னம்பிக்கை, வீரதீரம் உயா்வதோடு நாட்டிற்காக சேவையிலும் மிளிா்வு ஏற்படும் எனத் தெரிவித்தாா்.
சென்னையிலிருந்து விசாகப்பட்டினம் வரை செல்லும் இந்த அணியினா் மீண்டும் கடல் வழியாகவே சென்னை திரும்புகின்றனா். ராணுவ பெண் அதிகாரிகள் மட்டும் கடல்வழி சாகசப் பயணத்தில் ஈடுபடுவது இதுவே முதல்முறையாகும்.