நகர்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சி உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாகவே நன்றி நோட்டீஸ் அடித்து தயாராக வைத்துள்ளனர்.
மன்னார்குடி நகராட்சிக்கு உள்பட்ட 33 வார்டுகளுக்கு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட திமுக, அதிமுக, அமமுக, தேமுதிக, பாமக, நாதக, சிபிஐ, பாஜக ஆகிய அரசியல் கட்சிகளின் சார்பிலும், சுயேச்சைகள் என 142 பேர் களத்தில் உள்ளனர்.
உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்,சனிக்கிழமை நடைபெற்று. நாளை (பிப்.22), செவ்வாய்க்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
இந்நிலையில்,வாக்கு எண்ணிக்கை இன்னும் நடைபெறாமல்,தேர்தல் முடிவுகள் வெளிவராத நிலையில் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள், மன்னார்குடியில் உள்ள அச்சகங்களுக்கு வந்து, தங்கள் கட்சியின் வேட்பாளருக்கு பெருவாரியான வாக்குகள் அளித்து வெற்றி பெற செய்த வார்டு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து நோட்டீஸ் அச்சிட்டு வாங்கிச் சென்றுள்ளனர்.
ஒரே வார்டை சேர்ந்த வேறுவேறு கட்சியை சேர்ந்தவர்களும் ஒரே அச்சகத்தில் வெற்றி பெற்றதற்காக நன்றி நோட்டீஸ் அடித்து சென்றிருப்பதும் பல அச்சகங்களில் நடந்துள்ளது.