சிறையில் இருக்கும் வேட்பாளர் ஒருவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள சம்பவம் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளுக்கு நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில், திமுக சார்பில் 13-வது வார்டில் பாபு (39) போட்டியிட்டார். கடந்த 19-ம் தேதி வாக்குப் பதிவின்போது, இவரது தரப்புக்கும் அதிமுக வேட்பாளர் சுதா தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இது கைகலப்பாகவும் மாறியது.
இதில், காயமடைந்த சுதா விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனால், திண்டிவனத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிக்க | தோல்வியுற்ற அதிமுக வேட்பாளரின் கணவர் தற்கொலை
இதுகுறித்து இரு தரப்பிலும் ரோஷனை காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. ரோஷனை காவல் துறையினர் இரு தரப்பினர் மீது வழக்குப் பதிவு செய்து திமுக வேட்பாளர் பாபு உள்பட 5 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், திண்டிவனம் நகராட்சியில் 13-வது வார்டில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சுதாவை விட கூடுதல் வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் பாபு வெற்றி பெற்றார்.
இருப்பினும், தேர்தல் தகராறில் சிறைக்கு சென்றதால், அந்த வெற்றியை அவரால் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.