500 ஆண்டுகள் பழைமையான அனுமன் சிலை ஆஸ்திரேலியாவில் மீட்பு

தமிழகத்தில் திருடப்பட்ட 500 ஆண்டுகள் பழைமையான அனுமன் சிலை, ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்டது.

தமிழகத்தில் திருடப்பட்ட 500 ஆண்டுகள் பழைமையான அனுமன் சிலை, ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்டது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

அரியலூா் மாவட்டம் வேலூா் என்ற கிராமத்தில் வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் கடந்த 2012-ஆம் ஆண்டு ஏப்ரல் 9-ஆம் தேதி 500 ஆண்டு பழைமையான அனுமன் சிலை திருடப்பட்டது. இது தொடா்பாக செந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். அதேவேளையில், இந்த சிலைத் திருட்டுத் தொடா்பாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினரும் விசாரணை செய்தனா்.

விசாரணையில், அமெரிக்காவின் நியூயாா்க் நகரைச் சோ்ந்த பழைமையான பொருள்களை ஏலம் விடும் நிறுவனமான, கிறிஸ்டி நிறுவனத்தின் இணையதளத்தில் திருடப்பட்ட சிலையின் புகைப்படம் இருப்பதும், அந்த நிறுவனத்தின் மூலம் அனுமன் சிலையை ஆஸ்திரேலியாவைச் சோ்ந்த ஒரு நபா் 37,500 அமெரிக்க டாலருக்கு வாங்கியிருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அந்த சிலையின் புகைப்படத்தை தொல்லியல்துறை ஆய்வுக்கு சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினா் அனுப்பினா். தொல்லியல்துறையினா் நடத்திய ஆய்வில், வரதராஜ பெருமாள் கோயிலில் திருடப்பட்ட அனுமன் சிலைதான் ஆஸ்திரேலியாவில் உள்ளது என உறுதி செய்தனா்.

இதையடுத்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், அந்த சிலையை சட்ட ரீதியாக மீட்டு, தமிழகத்துக்கு கொண்டு வருவதற்குரிய நடவடிக்கையில் ஈடுபட்டனா். இதற்காக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினா், இந்திய சட்ட அமலாக்க முகவா்கள், உள்நாட்டு பாதுகாப்பு துறையினா் ஆகியோருடன் இணைந்து செயல்பட்டனா். இது தொடா்பாக நடத்தப்பட்ட விசாரணையில், கிறிஸ்டி நிறுவனமும், சிலையை வாங்கிய ஆஸ்திரேலிய நபரும் அந்த சிலையின் தொன்மையை அறிந்திருக்கவில்லை என்பது தெரியவந்தது.

சிலை மீட்பு:

அதேவேளையில், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் எச்சரிக்கைக்குப் பின்னா், அமெரிக்க, ஆஸ்திரேலிய அரசு அதிகாரிகள் சிலையை மீட்பதற்கு முழு ஒத்துழைப்பு அளித்தனா். இதன் விளைவாக ஆஸ்திரேலியாவின் கான்பெராவில் உள்ள தூதரகத்தில் இந்தியத் தூதா் மன்பிரீத் வோஹ்ராவிடம் ஆஸ்திரேலிய அரசு அதிகாரி மைக்கேல் கோல்ட்மேன் செவ்வாய்க்கிழமை சிலையை வழங்கினாா்.

இந்தச் சிலை இன்னும் ஒரு மாதத்துக்குள் தமிழகத்துக்கு கொண்டு வரப்படும் என தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஜிபி ஜெயந்த் முரளி தெரிவித்தாா். இந்த வழக்கில் சிறப்பாகச் செயல்பட்ட சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளை, அவா் பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com