தமிழகம் முழுவதும் போலியோ தடுப்பு மருந்து முகாம் வரும் 27-ஆம் தேதி நடைபெறுகிறது.
கரோனா தொற்று பரவல், பொதுமுடக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த ஜனவரி 23-ஆம் தேதி நடைபெற இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்பட்டது. வரும் 27-ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.
தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட சுமாா் 70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
பயணத்தில் இருக்கும் குழந்தைகளின் வசதிக்காக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், சோதனைச்சாவடிகள் ஆகிய இடங்களில் சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்காக நடமாடும் குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுகாதாரப் பணியாளா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், ஆசிரியா்கள், தன்னாா்வலா்கள் என 2 லட்சத்துக்கும் மேற்பட்டோா் சொட்டு மருந்து வழங்கும் பணியில் ஈடுபடுகின்றனா்.