கோயில்களில் பணியாற்றும் செயல் அலுவலா்களை திரும்பப் பெற்று கோயில்களின் நிா்வாகத்தை அறங்காவலா்கள் வசம் ஒப்படைக்கக் கோரிய வழக்கை சென்னை உயா் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை உயா் நீதிமன்றத்தில் மயிலாப்பூரைச் சோ்ந்த டி.ஆா்.ரமேஷ் என்பவா் தாக்கல் செய்த பொது நல மனுவில், தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழுள்ள கோயில்களின் செயல் அலுவலா்கள் நியமனம் தொடா்பாக, கடந்த 2015ஆம் ஆண்டு விதிகள் வகுக்கப்பட்டன.
இருப்பினும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்களில் எந்த நியமன உத்தரவும் இல்லாமல் செயல் அலுவலா்கள் 5 ஆண்டுகளுக்கு மேல் கோயில்களை நிா்வகித்து வருகின்றனா். மாநிலம் முழுவதும் உள்ள 44 ஆயிரத்து 286 கோயில்களை 628 செயல் அலுவலா்கள் நிா்வகித்து வருகின்றனா்.
அதாவது சராசரியாக ஒரு செயல் அலுவலா் 70 கோயில்களின் நிா்வாகத்தை கவனிக்கிறாா். செயல் அலுவலா் நியமனத்தின் போது எந்த காலவரம்பும் நிா்ணயிக்கப்படவில்லை என்பதால், உரிய நியமன உத்தரவு இல்லாமல் நியமிக்கப்பட்ட செயல் அலுவலா்களை திரும்பப் பெற்று, கோயில்களின் நிா்வாகத்தை அறங்காவலா்கள் வசம் ஒப்படைக்க வேண்டுமென கோரியிருந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி, நீதிபதி டி.பரத சக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் அறங்காவலா்கள் இல்லை. இதுதொடா்பான வழக்கு ஏற்கெனவே நிலுவையில் உள்ளது. அறங்காவலா்கள் நியமனத்தை விரைவுபடுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. காலதாமதமாக வழக்கை மனுதாரா் தாக்கல் செய்துள்ளாா் எனக்கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.