மானாமதுரை ஆஞ்சனேயர் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா: திரளான பக்தர்கள் தரிசனம்
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் உள்ள ஆஞ்சனேயர் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மானாமதுரை வைகை ஆற்றுப் பாலம் அருகே உள்ள ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சனேயர் கோயிலில் மூலவர் ஆஞ்சனேயருக்கு 16 வகையான அபிஷேகப் பொருள்களால் அபிஷேகங்கள் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
அதன் பின்னர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் கோயிலுக்கு வந்து ஆஞ்சனேயரை தரிசனம் செய்தனர்.
மானாமதுரை வைகை ஆற்றுப் பாலம் அருகே ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சனேயர் கோயிலில் நடைபெற்ற அனுமன் ஜெயந்தி விழாவில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்த மூலவர்.
மானாமதுரை ஸ்ரீ வீர அழகர் கோயிலில் தெற்கு முகம் நோக்கி அமைந்துள்ள மகுடம் தரித்த ஸ்ரீ வீர ஆஞ்சனேயர் சன்னதியில் மூலவருக்கு அபிஷேகங்கள் நடத்தி வெள்ளிக்கவசம் அலங்காரம் செய்யப்பட்டு வடைமாலை சாற்றி சிறப்பு பூஜைகள் தீபாராதனைகள் நடைபெற்றன. உற்சவர் வீர ஆஞ்சனேயருக்கும் அபிஷேகம், ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் நடைபெற்று கோயில் மண்டபத்தில் உற்சவர் எழுந்தருளி அருள்பாலித்தார்.
இப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் கோயிலுக்கு வந்து ஆஞ்சனேயரை தரிசனம் செய்தனர்.
மேலும் மானாமதுரை ரயில் நிலையம் எதிரே உள்ள பூரண சக்கர விநாயகர் கோயிலில் அமைந்துள்ள ஆஞ்சனேயர் சன்னதியில் சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் நடந்தது.