சென்னை: தமிழகத்தில், கரோனா தடுப்பூசி இரண்டு தவணைகளையும் செலுத்திக் கொண்டவர்களுக்கு கரோனா தொற்று உறுதியானால் அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள சுகாதாரத் துறை பரிந்துரை செய்திருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
வரும் நாள்களில் தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவல் அதிகரிக்கும் என்று அஞ்சப்படும் நிலையில், சுகாதாரத் துறை இந்த பரிந்துரையை செய்துள்ளது. சனிக்கிழமை தமிழகத்தில் புதிதாக 1,489 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், ஞாயிறன்று 1,594 பேருக்கு கரோனா உறுதியானது. இதில் சென்னையில் மட்டும் 776 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. முந்தைய நாள் 682 ஆக இருந்தது.
இதையும் படிக்க.. நல்ல செய்தி: குறைந்தபட்ச ஓய்வூதியம் உயர வாய்ப்பு?
இது குறித்து மா. சுப்பிரமணியன் தெரிவித்திருப்பதாவது, கரோனா பாதித்து தீவிர அறிகுறி இருப்பவர்கள் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள். லேசான அறிகுறி இருப்பவர்கள் கரோனா நோயாளிகள் பராமரிப்பு மையத்திலும், அறிகுறி இல்லாதவர்கள் வீடுகளிலும் இருக்க அனுமதிக்கப்படுவார்கள்.
கரோனா பாதித்த, தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை கண்காணிக்க மருத்துவர்களைக் கொண்ட தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டு, கரோனா உறுதியானவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார் அமைச்சர்.