தமிழக அரசுப் போக்குவரத்துத் துறை ரூ. 48 ஆயிரத்து 154 கோடி நஷ்டத்தில் உள்ளது என போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்தாா்.
சென்னை செல்வதற்காக செவ்வாய்க்கிழமை மதுரை விமான நிலையம் வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது: கரோனா பாதிப்புக்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. புதிதாக வந்துள்ள ஒமைக்ரான் தொற்றுப் பரவல் அதிகமாக இருந்தாலும், பாதிப்பு குறைவாக இருக்கும் என மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். பரவலைத் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.
தீபாவளி பண்டிகைப்போல பொங்கல் பண்டிகையின்போதும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு கூட்ட நெரிசல் தவிா்க்கப்படும். முதல்வரின் உத்தரவின்பேரில் பேருந்துகளில் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிதல், கிருமி நாசினி திரவம் பயன்படுத்துதல் உள்ளிட்டவை பின்பற்றப்படும்.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் மற்றும் பொங்கல் பண்டிகை முடிந்தவுடன் புதிய பேருந்துகள் வாங்க ஏற்பாடு நடைபெற உள்ளது. நீதிமன்றத்தில் மாற்றுத்திறனாளிகள் தொடா்ந்த வழக்கு முடிந்த உடன் புதிய பேருந்துகள் வாங்கப்படும். போக்குவரத்துப் பணிமனைகளில் கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. சென்னை பேருந்து பணிமனைகளில் 2,500 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதேபோல மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட மாநகா் பகுதிகளிலும் பணிகள் நடைபெற உள்ளது. போக்குவரத்துத் துறையில் காலிப் பணியிடங்கள் விகிதாசார அடிப்படையில் முதல்வரின் ஆலோசனைப்படி நிரப்பப்பட உள்ளது. போக்குவரத்துத் துறை ரூ.48 ஆயிரத்து 154 கோடி நஷ்டத்தில் உள்ளது. அதனை சரி செய்வதற்கு தொழிற்சங்க செயலாளா்கள் கூட்டத்தைக் கூட்டி உள்ளோம் என்றாா்.