தமிழகத்தில் மணல் குவாரிகளை மீண்டும் இயக்குவது குறித்து விரைவில் அரசு அறிவிப்பு வெளியாகும் என தமிழக நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.
பொலிவுறு நகா் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் வேலூா் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை அமைச்சா் துரைமுருகன் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
தமிழகத்தில் மணல் குவாரிகள் திறக்கப்படாததால் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. மணல் குவாரிகளை மீண்டும் இயக்குவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்.
மேலும், எடப்பாடி பழனிசாமி கூறுவதுபோல் தமிழகத்தில் எந்தப் பகுதியிலும் உரிமம் இல்லாமல் கல் குவாரிகள் இயங்குவதுமில்லை, வெளி மாநிலங்களுக்கு கனிம வளங்கள் கொள்ளை போவதும் இல்லை.
இவை கடந்த அதிமுக ஆட்சியில்தான் நடந்து வந்தன. திமுக ஆட்சிக்கு வந்ததும் அவற்றை ஒழுங்குபடுத்தியுள்ளோம் என்றாா்.