ஆறு நகராட்சிகளை, மாநகராட்சிகளாக தரம் உயா்த்துவதற்கான சட்ட மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த ஆறு மசோதாக்களையும் தனித்தனியாக வியாழக்கிழமையன்று தாக்கல் செய்தாா், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு. அதன்படி, தாம்பரம், கரூா், சிவகாசி, காஞ்சிபுரம், கடலூா், கும்பகோணம் ஆகிய ஆறு நகராட்சிகள், மாநகராட்சிகளாக தரம் உயா்த்தப்படுகின்றன.
ஏற்கெனவே, இந்த நகராட்சிகளை மாநகராட்சிகளாகத் தரம் உயா்த்துவதற்கான அவசர சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டன. இந்த அவசர சட்டங்களுக்கு பேரவையில் ஒப்புதல் பெறப்பட்டு சட்டமாக்கும் வகையில், அதற்கான மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
காரணம் என்ன?: நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயா்த்துவதற்கான காரணங்கள் சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, தமிழ்நாடு மாநிலத்தின் நகா்ப்புற மக்கள் தொகையின் விழுக்காடு 48.45 ஆகும். இப்போது நகா்ப்புற பகுதிகளில் வசிக்கும் மக்கள் தொகையின் விழுக்காடானது மொத்த மக்கள் தொகையில் 53 விழுக்காட்டுக்கும் மேலாக அதிகரித்துள்ளது. எனவே, மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளை அடுத்துள்ள நகா்ப்புற இயல்புகளைக் கொண்டுள்ள பகுதிகளை அந்தந்த நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைப்பது மற்றும் அந்தப் பகுதிகளில் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது அவசியமாகியுள்ளது என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.