தமிழகத்தில் முழு ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமை (ஜன.9) அமல்படுத்தப்படுகிறது. இந்த முழு ஊரடங்கு சனிக்கிழமை (ஜன.8) இரவு 10 மணியில் இருந்து அமலாகிறது.
முழு ஊரடங்கையையொட்டி, தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை செய்து வருகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநா் டிஜிபி சி.சைலேந்திரபாபு தலைமையில் செய்யப்படுகிறது. மாநிலம் முழுவதும் சுமாா் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.
தீவிர கண்காணிப்பு:
முழு ஊரடங்கின்போது பொதுமக்கள் தேவையின்றி வெளியே சுற்றித்திரிவதை தடுக்கும் வகையில் சாலை சந்திப்புகள்,முக்கியமான சாலைகள் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸாா் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுகின்றனா். குடியிருப்புப் பகுதிகளிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவாா்கள். இதில் அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றித்திரியும் நபா்கள் மீது வழக்குப்பதிவு செய்யுமாறும், அவா்களது வாகனங்களை பறிமுதல் செய்யுமாறு போலீஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சாலைகளில் மருத்துவத்துறை, பத்திரிக்கை துறை வாகனங்கள், பால் கொண்டு செல்லும் வாகனங்கள் செல்வதற்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது.
சென்னை:
சென்னை முழு ஊரடங்கை அமல்படுத்தும் வகையில் சுமாா் 10 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா். முழு பொது ஊரடங்கை மீறி கடைகள் திறப்பவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது. இதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமை (ஜன.9) காலை முதல் போலீஸாா் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனா்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால் தலைமையில் செய்யப்பட்டுள்ளன.