பண்டிகை நாட்களில் வாகனங்கள் நிறுத்துவதற்கு இடம் இல்லாததால், சாலையோரங்களில் நிறுத்தப்பட்ட வாகனங்களால் பென்னாகரம் கடைவீதி பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியினை சுற்றி 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமப் பகுதியில் இருந்து மக்கள் அன்றாட தேவைக்கான பொருட்கள் வாங்குவதற்கும், விவசாய பொருட்களை சந்தைப்படுத்தவும் பென்னாகரம் பகுதிக்கு வருகின்றன.
பண்டிகை நாட்களில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் அதிக அளவில் பென்னாகரம் பகுதிக்கு இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருவர். பண்டிகை காலங்களில் பென்னாகரம் கடை வீதி பகுதியில் காவல்துறையின் சார்பில் தற்காலிகத் தடுப்புகள் அமைக்கப்பட்டு, நடுவே இருசக்கர வாகனங்கள் நிறுத்தி இருபுறங்களிலும் இருசக்கர வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு, போக்குவரத்தினை புறவழிச் சாலையில் செல்வதற்கு மாற்றி அமைக்கப்படும்.
ஆனால், காவல் துறையின் சார்பில் நிகழாண்டு பொங்கல் பண்டிகைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏதும் மேற்கொள்ளவில்லை.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பழம், பூ ,பூஜை பொருட்கள், மண் பானை, கரும்பு, வெல்லம், கோலப்பொடிகள், கலர் பொடிகள், புத்தாடைகள், கால்நடைகளுக்கு தேவையான கயிறுகள், சலங்கை, ஆடுகள் உள்ளிட்டவைகளை வாங்குவதற்காக ஏராளமான பொதுமக்கள் கடைவீதி மற்றும் வார சந்தை பகுதியில் குவிந்தனர்.
கிராமப் பகுதிகளில் இருந்து வந்திருந்தவர்கள் தங்களின் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம் நிறுத்த இடமில்லாததால் கடைவீதி பகுதியின் இரு புறங்களிலும் நிறுத்தினர். பண்டிகையின் காரணமாக சிறப்பு சந்தை கூட்டப்பட்டதால் தொடர்ந்து மக்கள் கூட்டம் அதிகரித்தது.
சாலையோரங்களில் நிறுத்தப்பட்ட வாகனங்களால் கடைவீதி பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் போக்குவரத்து காவல் துறையினர் மற்றும் போலீஸார் கடைவீதி பகுதியில் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டும், ஒலிபெருக்கியின் மூலம் அறிவுறுத்தினர்.
ஆனால் சாலையோர நிறுத்தப்பட்ட வாகனங்களாலும், போக்குவரத்தினை மாற்றி அமைக்காததால் பேருந்துகள் செல்ல முடியாமல் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டது.
இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். எனவே பென்னாகரம் கடை வீதி பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் தற்காலிகத் தடுப்புகள் அமைத்தும், வாகனங்கள் நிறுத்துவதற்கான இடம் ஒதுக்கீடு செய்து போக்குவரத்தினை மாற்றியமைத்து கூட்டநெரிசல் ஏற்படாதவாறு போக்குவரத்து காவல் துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.