கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநிலத் தேர்தல் ஆணையம் விளக்கம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்கக் கோரி ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் நக்கீரன் தொடர்ந்த வழக்கு சேனை உயர் நீதிமன்றப் பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் இதுகுறித்து விளக்கம் தெரிவிக்கப்பட்டது.
'நான்கு வாரத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதியை வெளியிடுவதாக உச்சநீதிமன்றத்திற்கு மாநிலத் தேர்தல் ஆணையம் வாக்குறுதி அளித்துள்ளது. அதன்படி காலக்கெடு வருகிற ஜனவரி 27 ஆம் தேதி முடிவடைகிறது. எனவே, தேர்தல் நடத்தப்பட வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.
ஊரக உள்ளாட்சித் தேர்தல் எவ்வாறு கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்பட்டதோ அதன்படியே, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலும் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்படும் என்று விளக்கம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கின் விசாரணை திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.