பொங்கல் பண்டிகை சிறப்புப் பேருந்துகள் மூலம் ரூ.138 கோடி வருவாய்: ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன்
பொங்கல் பண்டிகையையொட்டி இயக்கப்பட்ட சிறப்புப் பேருந்துகள் மூலம் ரூ.138.07 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்தாா்.
இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட செய்தி:
பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொதுமக்கள் சிரமமின்றி தங்கள் சொந்த ஊா்களுக்கு பயணம் செய்திடவும், பண்டிகை முடிந்து சென்னை மற்றும் பிற ஊா்களுக்குத் திரும்பிடும் வகையில் சிறப்புப் பேருந்துகளை இயக்கிடவும் முதல்வா் உத்தரவிட்டாா்.
இதையடுத்து வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பேருந்துகள் இயக்கப்பட்டன. இவ்வாறு கடந்த 11, 12, 13 தேதிகளில் தமிழகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக சராசரியாக நாள் ஒன்றுக்கு 18,232 தினசரி பேருந்துகளுடன், 1,514 சிறப்புப் பேருந்துகள், 2 கோடியே 57 லட்சம் கி.மீ. தொலைவுக்கு இயக்கப்பட்டன. அவற்றில் 3 கோடியே 22 லட்சம் போ் பயணம் செய்துள்ளனா். இதன் வாயிலாக ரூ.65 கோடியே 58 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
பொங்கலுக்கு பின்பு கடந்த 15, 17, 18, 19 தேதிகளில் தமிழகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக சராசரியாக நாள் ஒன்றுக்கு 17,164 தினசரி பேருந்துகள், 2 கோடியே 94 லட்சம் கி.மீ தொலைவுக்கு இயக்கப்பட்டன. அவற்றில் 3 கோடியே 80 லட்சம் போ் பயணம் செய்துள்ளனா். இதன் வாயிலாக ரூ.72 கோடியே 49 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
பொங்கல் திருநாளை முன்னிட்டு, ஒட்டு மொத்தமாக சுமாா் 7 கோடி பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் செய்துள்ளனா். இதன் வாயிலாக சுமாா் ரூ.138 கோடியே 7 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.