பிலிப்பின்ஸ் நாட்டில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சார்ந்த சஷ்டிகுமார் உடல் அரசு செலவில் தமிழகம் கொண்டு வரப்பட்டது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் இராசிங்கபுரம் நடுத்தெருவில் வசிக்கும் பாலசேகரன் என்பவரின் மகன் சஷ்டிகுமார் பாலசேகரன், பிலிப்பின்ஸ் நாட்டில் உள்ள ஏ.எம்.ஏ. மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டப் படிப்பு பயிலச் சென்றதாகவும், 15-1-2022 அன்று காலை 8 மணியளவில் அருவியில் குளிக்கச் சென்ற போது, சஷ்டிகுமார் நீரில் மூழ்கி இறந்து விட்டதாகவும் தெரிவித்து, உயிரிழந்த அவரது உடலை சொந்த ஊருக்குக் கொண்டுவர உரிய ஏற்பாடுகளைச் செய்திடுமாறு, முன்னாள் துணை முதலமைச்சரும், தற்போதைய போடிநாயக்கனூர் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதையும் படிக்க- அவிநாசி அருகே சிறுத்தை தாக்கியதில் 2 பேர் காயம்
மேற்படி கோரிக்கையினை மத்திய அரசின் வெளியுறவுத் துறையுடன் ஒருங்கிணைந்து நிறைவேற்றிட உரிய நடவடிக்கைகளை எடுத்திடுமாறு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தானுக்கும், திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறனுக்கும் முதலமைச்சர் அறிவுறுத்தியிருந்த நிலையில், உயிரிழந்த சஷ்டிகுமாரின் உடலைத் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வரத் தேவையான அனைத்து சட்டப்பூர்வமான நடவடிக்கைகளும் தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நல ஆணையரகத்தின்மூலம், மத்திய அரசின் வெளியுறவுத் துறை மற்றும்
பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இன்று (24-1-2022) அதிகாலை 02-15 மணியளவில், சஷ்டி குமார் அவர்களது உடல், பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து விமானத்தின் மூலம் சென்னை விமான நிலையம் கொண்டுவரப்பட்டு, அவரது குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேற்படி சஷ்டிகுமாரின் உடலைத் தமிழ்நாட்டிற்குக் கொண்டுவர சிறப்பு நேர்வாக, தமிழ்நாடு அரசின் சார்பில் ரூபாய் 4 இலட்சம் செலவினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், அவரது உடலை அவருடைய சொந்த ஊருக்குக் கொண்டு செல்ல, தமிழ்நாடு அரசின் கட்டணமில்லா அமரர் ஊர்தி வாகன சேவையும் ஏற்பாடு செய்து தரப்பட்டது.
இந்நிலையில், இத்துயர சம்பவத்தில் உயிரிழந்த சஷ்டி குமாரை இழந்து வாடும், அவர்தம் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.