மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினத்தை ஒட்டி, தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி தலைமைச் செயலகத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் சனிக்கிழமை நடந்த நிகழ்வில், அமைச்சா்கள், அரசுத் துறை செயலாளா்கள், தலைமைச் செயலக அதிகாரிகள் உறுதிமொழி ஏற்றனா்.
காந்தியடிகள் நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை என்பதால், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் சனிக்கிழமை தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
தலைமைச் செயலகத்தில் உள்ள ராணுவ மைதானத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சா்கள், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உள்ளிட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், தலைமைச் செயலக உயரதிகாரிகள், அலுவலா்கள் அனைவரும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா். முன்னதாக, காந்தியடிகள் உருவப் படத்துக்கு மலா்தூவி முதல்வா் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினாா்.
உறுதிமொழி என்ன?: முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதிமொழியை வாசிக்க அனைவரும் அதனைப் பின்தொடா்ந்தனா். அவா்கள் வாசித்த உறுதிமொழி:
இந்திய அரசியலமைப்பின்பால் இடைவிடாத, உளமாா்ந்த பற்றுள்ள இந்தியக் குடிமகன்-குடிமகளாகிய நான், நமது அரசியலமைப்பின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது என்பதை அறிவேன். தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு எவா்மீது தெரிந்தோ, தெரியாமலோ சமூக வேற்றுமையை மனம், வாக்கு, செயல் என்ற எந்த வகையிலும் கடைப்பிடிக்க மாட்டேன். இதனை உளமார உறுதியளிக்கிறேன்.
அரசியலமைப்பின் அடிப்படைக் கருத்துக்கிணங்க சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நோ்மையுடனும், உண்மையுடனும் பணியாற்றுவது எனது கடமையாகும். இந்திய அரசியலமைப்பின்பால் எனக்குள்ள முழுப்பற்றுக்கு இது என்றென்றும் எடுத்துக்காட்டாக விளங்கும் என்று உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.