தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த லாவண்யா (17) விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து லாவண்யாவை அதிக வேலை வாங்கி மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக விடுதிக் காப்பாளர் சகாயமேரியை கைது செய்தனர்.
ஆனால், விடுதிக் காப்பாளர் உள்ளிட்டோர் மதம் மாறுமாறு வற்புறுத்தியதால் லாவண்யா தற்கொலை செய்து கொண்டார் என பெற்றோர் புகார் எழுப்பினர். மேலும், இதை வலியுறுத்தி பாஜகவினர், இந்து அமைப்பினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மாணவி தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார். மாணவியின் பெற்றோர் சிபிசிஐடி விசாரணைக்கு முறையிட்ட நிலையில் வழக்கு சிபிஐக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.