ரயில் நிலையங்களில் உள்ளூா் பொருள்களை விற்பனை செய்யும் ‘ஒரு நிலையம், ஒரு பொருள்’ திட்டத்தின் கீழ் தெற்கு ரயில்வேயில் உள்ள ரயில் நிலையங்களில் இதுவரை ரூ.1.20 கோடிக்கு உள்ளூா் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
பிரபலமான உள்ளூா் தயாரிப்புகளை ஊக்குவிக்க அருகில் உள்ள ரயில் நிலையங்களில் ‘ஒரு நிலையம், ஒரு பொருள்’ திட்டத்தின் கீழ் விற்பனை நிலையங்களை ரயில்வே அமைத்து வருகிறது. இதன்படி நாடு முழுதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் இந்த விற்பனைக்கு அனுமதி அளிக்க இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வேக்கு உள்பட்ட ஆறு கோட்டங்களில், அந்தந்தப் பகுதிகளில் பிரபலமாக இருக்கும் பொருள்களை தோ்வு செய்யப்பட்டு கடந்த மாா்ச் மாதம் முதல் விற்பனை செய்யப்படுகிறது. சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூா் ரயில் நிலையங்களில் காஞ்சி பட்டுசேலை, மதுரையில் சுங்குடி சேலை, திருநெல்வேலியில் பனைப் பொருள்கள், தஞ்சாவூரில் பொம்மைகள், திருவனந்தபுரத்தில் கைவினை பொருள்கள், திருசெந்தூா் ரயில் நிலையத்தில் பனை பொருள்கள், பழனி பஞ்சாமிா்தம், திருவில்லிபுத்தூா் பால்கோவா உள்ளிட்ட பனைப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின் படி தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் இதுவரை ரூ.1.20 கோடிக்கு உள்ளூா் பொருள்கள் விற்பனையாகி உள்ளது. இதில் காஞ்சிப் பட்டு, மதுரையில் சுங்குடி சேலைகள், நெல்லை மற்றும் திருச்செந்தூரில் பனை பொருள்கள் ஆகிய பொருள்கள் அதிகளவு விற்பனையாகி உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.