மேட்டூர்: கரோனா காலத்தில் நிறுத்தப்பட்டிருந்த மேட்டூர் பயணிகள் ரயில் சேவை திங்கள்கிழமை மீண்டும் தொடங்கியது.
மேட்டூரிலிருந்து சேலம் வழியாக ஈரோட்டிற்கு பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயிலில் சென்னை செல்லும் பயணிகளுக்கான முன்பதிவு பெட்டிகள் மூன்றும் இணைக்கப்பட்டிருந்தது. கரோனா காலத்தில் இந்தியா முழுவதும் ரயில் சேவை நிறுத்தப்பட்டபோது மேட்டூர் பயணிகள் ரயில் சேவையும் நிறுத்தப்பட்டது.
இதையும் படிக்க | அதிமுக பொதுக்குழுவை நடத்த அனுமதி: சென்னை உயர்நீதிமன்றம்
2019 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்ட பயணிகள் ரயில் திங்கள்கிழமை காலை மீண்டும் தொடங்கப்பட்டது. மேட்டூர் ரயில் நிலையத்திற்கு வந்த பயணிகள் ரயிலை மேட்டூர் சட்டப்பேரவை உறுப்பினர் சதாசிவம் மலர்தூவி வரவேற்றார். பின்னர் ரயிலில் வந்த பயணிகளுக்கு லட்டு வழங்கி வரவேற்றார்.
தற்போது சேலம்-ஈரோடு மார்க்கமாக இயக்கப்படும் இந்த பயணிகள் ரயிலில் சென்னை செல்லும் பயணிகளுக்கான முன்பதிவு பெட்டிகளையும் இணைக்க வேண்டும் என்று மேட்டூர் பேரவை உறுப்பினர் சதாசிவம் ரயில்வே துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.