தமிழகத்தில் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் திருவிழா வரும் 28 முதல் ஆகஸ்ட் 10 வரை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இதில் 186 நாடுகளை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட சர்வதேச வீரர் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
இதனையொட்டி கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காஞ்சிபுரத்தில் மாவட்ட விளையாட்டு அரங்கில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை மாரத்தான் போட்டி நடைபெற்றது.
இதில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
மாரத்தான் போட்டியினை சட்டப்பேரவை உறுப்பினர் எழிலரசன், மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
மாவட்ட விளையாட்டு அரங்கில் இருந்து பேருந்து நிலையம் மூங்கில் மண்டபம் மேட்டுத் தெரு வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை இப் போட்டி நடைபெற்றது.
இதையும் படிக்க | அதிமுக பொதுச் செயலர் பதவிக்கு 4 மாதங்களில் தேர்தல் நடைபெறுமா?
இதில் முதல் ஐந்து இடங்களை பிடித்த மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
ஆண்கள் பிரிவில் முதலிடத்தை சபிதா கல்லூரி மாணவர் கோகுல் சீனிவாசன், இரண்டாவது, மூன்றாவது இடத்தை அருண் மற்றும் ஸ்ரீதர் வெற்றி பெற்றனர்.
பெண்கள் பிரிவில் முதலிடத்தை பெரிய காஞ்சிபுரம் மகளிர் மேல்நிலைப்பள்ளி சேர்ந்த காவியா, இரண்டாம் இடத்தை எஸ்.எஸ்.கே.வி பள்ளி மாணவி அர்ச்சனா, மூன்றாம் இடத்தை ராணி அண்ணாதுரை மேல்நிலைப்பள்ளி மாணவி சரண்யா ஆகியோர் பிடித்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ், முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, நீச்சல் பயிற்சியாளர் ஆனந்த் மற்றும் பள்ளி கல்லூரி விளையாட்டுத் துறை அலுவலர்கள் ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.