சாத்தூர் வெங்கடாசலபதி கோயிலில் தேரோட்டம்
சாத்தூரில் அருள்மிகு வெங்கடாசலபதி கோயிலில் ஆனிப் பிரம்மோற்சவத் திருவிழாவில் தேரோட்டம் புதன்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வைப்பாற்றின் கரையில் அமைந்துள்ள தென்திருப்பதி என அழைக்கப்படும் அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில் சுமார் 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாகும். இக்கோயிலின் ஆனித் பிரம்மோற்சவத் திருவிழா கோலாகலமாக கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த ஆனிப் பிரமோற்சவத் திருவிழா 12 நாட்கள் நடைபெற்றன.
இத்திருவிழாவில் 12 நாட்களும் அன்னவாகனம், சிம்மவாகனம், கருடவாகனத்தில், குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த ஆனிப் பிரம்மோத்ஸ்வத் திருவிழாவில், 9ம் நாள் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இதையும் படிக்கலாம்: ஆனி மாத பெளர்ணமி: சுருளிமலை சுருளிநாதருக்கு முக்கனி பூஜை
இதில் காலை முதல் அலங்கரிக்கப்பட்ட தேரில் பெருமாள் ஸ்ரீதேவி,பூதேவி ஆகிய அலங்காரத்தில் எழுந்தருளினார். இதையடுத்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்.இராமச்சந்திரன், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் சாத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுக்க தேர் நிலையிலிருந்து புறப்பட்டு தேரடி தெரு,பள்ளிவாசல் தெரு,பிரதான சாலை, வடக்குரத வீதி வழியாக நான்கு மாட வீதிகளைச் சுற்றி வந்து மீண்டும் தேர்நிலையை அடைந்தது.
இத்தேர் திருவிழாவில் சாத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள சடையம்பட்டி, படந்தால்.அணைக்கரைபட்டி, மேட்டமலை உள்ளிட்ட பகுதியிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து, தேரை வடம் பிடித்து இழுத்தனர். மேலும் சாத்தூரில் உள்ள முக்கிய பிரமுகர்களும், அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.மேலும் பல்வேறு சமூக ஆர்வலர்களின் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.