முதல்வர் மு.க.ஸ்டாலின் குணமடைந்து வருவதாகவும் அவர் நலமுடன் இருப்பதாகவும் காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இரண்டு நாள்களுக்கு முன்பு, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் தனிமைப்படுத்திக் கொண்டு வீட்டிலிருந்தே அரசுப் பணிகளை கவனித்து வந்தார்.
இதையடுத்து கரோனா பரிசோதனைகள் மற்றும் மருத்துவக் கண்காணிப்புக்காக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கரோனா தொற்றுக்கான கண்காணிப்புக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனைகள் முடிந்து கரோனா சிகிச்சை வழிமுறைகளின்படி மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. மு.க.ஸ்டாலின் குணமடைந்து வருகிறார். அவர் நலமுடன் இருக்கிறார். இன்னும் சில நாள்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.