கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 18 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி இறந்த குழந்தைகளுக்கு இன்று நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி காசிராமன் தெரு ஸ்ரீ கிருஷ்ணா உதவி பெறும் பள்ளியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். அத்துடன் 18 குழந்தைகள் காயமடைந்தனர். இந்த துயர சம்பவம் இந்தியா முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது.
ஆண்டுதோறும் இறந்த குழந்தைகளின் நினைவு தினம் ஜூலை 16ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று 18ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி குழந்தைகளை இழந்த பெற்றோர்கள், இறந்த குழந்தைகளின் புகைப்படங்களுக்கு மாலை அணிவித்து , புத்தாடைகள் வைத்து கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர்.
அதுமட்டுமின்றி பல தன்னார்வ அமைப்பினரும், அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் அவர்களின் புகைப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த துயர சம்பவம் நடந்து 18 ஆண்டுகள் ஆகினும், இன்னும் பிஞ்சு குழந்தைகளை இழந்த தாக்கம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மத்தியிலிருந்து இன்னும் விலகவில்லை. குழந்தைகள் இறந்த தினத்தை குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவிக்க வேண்டும் மற்றும் பள்ளிகளுக்கு உள்ளுர் விடுமுறை அளிக்க வேண்டும் என 18 ஆண்டுகளாக இறந்த குழந்தைகளின் பெற்றோர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.