வாழப்பாடி: சேலம் மாவட்டம், வாழப்பாடியில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மற்றும் நெஸ்ட் அறக்கட்டளை இணைந்து நடத்தும் புத்தக கண்காட்சி நாளை வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
தமிழகத்தில் பிரபலமான புத்தக வெளியீட்டு நிறுவனங்களின் ஒன்றான நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், வாசகர்கள், மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கு அந்தந்த பகுதியில் தேவையான புத்தகங்கள் கிடைப்பதற்கு வழிவகை செய்யும் நோக்கில், முக்கிய நகரங்களில் புத்தக கண்காட்சி நடத்தி வருகிறது.
சேலம் மாவட்டம், வாழப்பாடியில் நெஸ்ட் அறக்கட்டளையுடன் இணைந்து இரண்டாவது ஆண்டாக புத்தக கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் நாளை வெள்ளிக்கிழமை தொடங்கி, ஜூலை 31 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை 10 நாள்கள் நடைபெறுகிறது.
இதையும் படிக்க | குரூப் 1 தேர்வு அறிவிப்பு: டிஎன்பிஎஸ்சி வெளியீடு
சேலம் மாவட்ட கல்வி அலுவலர் உதயக்குமார் புத்தக கண்காட்சியை திறந்து வைக்கிறார். உள்ளாட்சி பிரதிநிதிகள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர்.
தமிழ் இலக்கியம், கலை, அறிவியல், வரலாறு, சமூக நாவல்கள், பொது அறிவு, சிறுவர் இலக்கியம், பிரபல எழுத்தாளர்களின் நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை, ஆன்மீகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அனைத்து பதிப்பகத்தின் நுால்களும் காட்சிக்கு வைக்கப்படுகிறது.
இந்த புத்தக கண்காட்சியில் வாசகர்கள், மாணவர்கள், பொதுமக்கள் முகக்கசவம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து கலந்து கொள்ளலாம்.
புத்தக விலையில் பள்ளி, கல்லுாரி, நுாலகங்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்படுமென நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் மற்றும் நெஸ்ட் அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.