சமூகப் பொறுப்புணர்வு மிகுந்த முற்போக்கான படைப்புகள் திரையை ஆளட்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், 68வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் விருதுகளைக் குவித்துத் தமிழ்த்திரையுலகுக்குப் பெருமை சேர்த்துள்ள சூர்யா, சுதா கொங்கரா, ஜி.வி. பிரகாஷ்குமார், அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட சூரரைப் போற்று படக்குழுவினருக்கும்; இயக்குநர் வசந்த், இலட்சுமி பிரியா சந்திரமவுலி, ஸ்ரீகர் பிரசாத் உள்ளிட்ட சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படக்குழுவினருக்கும், மடோன் அஸ்வின், யோகிபாபு உள்ளிட்ட மண்டேலா படக்குழுவினருக்கும் எனது பாராட்டுகள்!
அனைத்து விருதாளர்களுக்கும் வாழ்த்துகள்! சமூகப் பொறுப்புணர்வு மிகுந்த முற்போக்கான படைப்புகள் திரையை ஆளட்டும்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
2020-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில் 9 பிரிவுகளில் 10 தேசிய விருதுகளை தமிழ் திரைப்படங்கள் தட்டிச் சென்றுள்ளன.