செங்கல்பட்டு: செங்கல்பட்டு ஸ்ரீ கடும்பாடி சின்ன முத்துமாரியம்மன் கோயிலில் 58 ஆம் ஆண்டு ஆடி தீமிதி திருவிழா நடைபெற்றது.
செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் அகழகக்கரை ஓயம் ஸ்ரீ கடும்பாடி சின்ன முத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆடித் திருவிழா ஜூலை 18 ஆம் தேதி தொடங்கி 24 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. திங்கள் கிழமை காப்பு கட்டுதல், கிரகம் எடுத்து வருதல் உள்ளிட்டவை நடைபெற்றன.
இதனையடுத்து தினமும் சிறப்பு பூஜைகளும் அன்றாட அன்னதானமும் நடைபெற்றது. சனிக்கிழமை மணப்பாக்கம் கன்னி கோயில் ஆற்றில் இருந்து ஜலம் திரட்டி வருதல், கிரகம் எடுத்து வருதல் நிகழ்ச்சிகளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்புப் பூஜைகளும் நடைபெற்றன. மாலை 7 மணிக்கு மேல் பெரிய நத்தம் சேப்பாட்டி அம்மன் கோயிலில் இருந்து பக்தர்கள் கரகங்களுடன் ஊர்வலமாக வந்து இரவு தீ மிதி விழா நடைபெற்றது.
நூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் விரதம் இருந்து ஆண்கள், பெண்கள், குழந்தைகள் தீக்குழியில் இறங்கி தீ மிதித்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூழ்ந்து நின்ற வண்ணம் தீமிதி விழாவை கண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
இதையடுத்து கொட்டும் மழையிலும் வான வேடிக்கை மேளதாளங்களுடன் அம்மன் ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலம் கோயிலில் இருந்து புறப்பட்டு ஜிஎஸ்டி சாலை, மேட்டுத் தெரு, காந்தி சாலை, பஜார் வீதி உள்ளிட்ட சாலைகள் வழியாக ஊர்வலம் நடைபெற்று சனிக்கிழமை கோயிலை வந்து அடைந்தது.
இதனை அடுத்து சாமி அம்மன் ஊஞ்சல் சேவை, ஆராதனைகள் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை மதியம், கூழ் வார்த்தல் விழாவும் இரவு, போடுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் பூசாரி அய்யனார், சி .கே. வி கிருஷ்ண மூர்த்தி சி. கே .வி. வெங்கடேசன் ராணி ஜெயவேல், ஜே. பாஸ்கரன், தேவகி உள்ளிட்ட உபயதாரர்கள், செங்கல்பட்டு மாவட்ட கோயில் பூசாரிகள் நல வாரிய சங்கம் பூசாரிகள் கலந்து கொண்டு செய்து வருகின்றனர்.