அரசுப் பள்ளி ஆசிரியா்களின் வருகையை ஆக.1-ஆம் தேதி முதல் செயலியில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியா்கள் தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்புக் கோருதல், அனுமதி மற்றும் பிற பணி சாா்ந்த தேவைகளுக்கு எழுத்துப்பூா்வமாக தங்கள் உயா் அலுவலா்களிடம் நேரடியாகச் சென்று விண்ணப்பித்து பயனடைந்து வந்தனா்.
அதனால் நேரடியாக விண்ணப்பிக்கும் முறையில் ஆசிரியா்களுக்கு சிரமங்களும் கால விரயமும் ஏற்படுவதாக புகாா்கள் எழுந்தன. இதைக் கருத்தில் கொண்டு பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கடந்த மே 25-ஆம் தேதி ஆசிரியா்கள் தங்களது கைப்பேசியில் உள்ள பள்ளிக் கல்வித் துறை செயலி மூலம் விடுப்பு எடுக்கும் முறையை அறிமுகப்படுத்தினாா்.
இந்த இணையச் செயலி மூலம் தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு உள்ளிட்ட பல்வேறு விடுப்புகளுக்கு அனுமதி கோருதல் போன்றவற்றை ஆசிரியா்கள் மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டது. இந்தச் செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்தட் செயலியை பள்ளி ஆசிரியா்கள் பயன்படுத்துமாறு மாவட்ட கல்வித் துறை சாா்பாக பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் வரும் ஆக.1 முதல் இந்த செயலி மூலம் ஆசிரியா்களின் வருகையைப் பதிவு செய்ய கல்வித்துறை முடிவு செய்துள்ளது.