மத்திய ரயில்வே அமைச்சகத்தால் பரிந்துரைக்கப்பட்ட, பயணிகள் வசதிக் குழு தலைவர் பி.கே. கிருஷ்ணதாஸ் தலைமையிலான குழுவினர் வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தது.
அப்போது பயணிகளுக்கான வசதிகள், குடிநீர், கழிப்பிடம், நிழற்குடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து கடந்த 165 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட வாலாஜா ரோடு ரயில் நிலையம், தொடங்கும்போது பயன்படுத்தப்பட்ட ரயில் தளவாட பொருட்களை பார்வையிட்டார்.
அப்போது வாலாஜா ரோடு ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள், ரயில் பயணிகள் மற்றும் பொது மக்கள் பயணிகள் வசதிக் குழு தலைவர் பி.கே. கிருஷ்ணதாஸிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ரயில் மீண்டும் இயக்கப்பட்டுள்ள நிலையில், அந்த ரயில் அனைத்தும் வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின்போது பயணிகள் வசதிக் குழு உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், மஞ்சுநாதா மற்றும் வாலாஜா ரோடு ரயில் நிலைய மேலாளர் பிரகாஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.