செய்யாறு: இன்று(சனிக்கிழமை) ஓய்வு பெறவிருந்த செய்யாறு மாவட்ட பத்திரப் பதிவாளரை இடைநீக்கம் செய்து சென்னை ஐ.ஜி. உத்தரவிட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மாவட்ட பத்திரப் பதிவு அலுவலகத்தின் கீழ் செய்யாறு, ஆரணி, வெம்பாக்கம், தெள்ளாறு உள்ளிட்ட 11 சார் - பதிவாளர்
அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
செய்யாறு மாவட்டப் பதிவாளராக சம்பத் என்பவர் கடந்த மூன்று வருடங்களாக பணியாற்றி வந்தார். இவரது பணிக்காலம் ஜூலை 30 ஆம் தேதியோடு நிறைவடைகிறது.
இந்நிலையில், மாவட்டப் பதிவாளராக பணியாற்றி வந்த சம்பத் வெள்ளிக்கிழமை திடீரென இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இவர் மாவட்டப் பதிவாளராக பணியாற்றிய காலத்தில் நிலத்திற்கான வழி காட்டி மதிப்பீட்டை விட குறைவான மதிப்பீட்டை கொண்டு பத்திரப் பதிவு செய்து அரசுக்கு இழப்பீடு செய்ததாக பல புகார்கள் வந்துள்ளன.
மேலும், இவர் பணியாற்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் ரெய்டு நடத்தியது போன்ற குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருந்து வருகின்றன. இது தொடர்பாக பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இன்று( ஜூலை 30) பணி நிறைவு பெற இருந்த நிலையில் மாவட்ட பதிவாளர் சம்பத்தை இடைநீக்கம் செய்திட பத்திரப்பதிவு சென்னை ஐ.ஜி உத்தரவிட்டுள்ளார்.