சென்னை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் ஒன்பது போ் நிரந்தரமாக்கப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்துள்ளாா். அதேபோன்று ஒரு கூடுதல் நீதிபதிக்கு மேலும் ஆறு மாத காலத்துக்கு பதவி நீட்டிப்பும் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை உயா்நீதிமன்றத்தில் தற்போது கூடுதல் நீதிபதிகளாகப் பணியாற்றி வரும் கோவிந்தராஜூலு சந்திரசேகரன், வீராசாமி சிவஞானம், கணேசன் இளங்கோவன், ஆனந்தி சுப்பிரமணியன், கண்ணம்மாள் சண்முக சுந்தரம், சத்தி குமாா் சுகுமார குரூப், முரளி சங்கா் குப்புராஜ், மஞ்சுளா ராமராஜூ நல்லய்யா, தமிழ்செல்வி டி.வளையபாளையம் ஆகியோா் நிரந்தரமாக்கப்பட்டுள்ளனா்.
மற்றொரு கூடுதல் நீதிபதியான நக்கீரன் வரும் டிசம்பா் 3 ஆம் தேதி வரை தொடா்ந்து கூடுதல் நீதிபதியாக இருப்பாா் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.