வெப்பநிலையால் அதிகரித்து வரும் மின் தேவையை பூர்த்தி செய்ய அதிகளவில் நிலக்கரியை உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மத்திய நிலக்கரி, சுரங்கங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறினார்.
என்எல்சி இண்டியா லிமிடெட் நிறுவனத்தில் (நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்) சுரங்கப் பணிகளை ஆய்வு செய்த பின்னர் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிகரித்து வரும் மின் தேவையால் நாட்டின் பொருளாதாரம் உயரும். பிரதமரின் உஜாலா திட்டத்தின் கீழ் மக்களுக்கு இதுவரை 36.79 கோடி எல்இடி மின்விளக்குகள் விநியோகம் செய்யப்பட்டதன் விளைவாக மின்நுகர்வின் அளவு கணிசமாக குறைந்துள்ளது.
எனினும் அதிக வெப்பநிலையால் கடந்த சில மாதங்களாக மின்நுகர்வு அதிகரித்து வருகிறது. இதை சமாளிக்க ஏதுவாக, தடையற்ற மின் உற்பத்தியை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது. 2040-ம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் மின் உற்பத்தி, சுமார் 3000 பில்லியன் யூனிட்டுகளாக இருக்கும் அதே வேளையில், இந்தியாவின் எரிசக்தி தேவை இரண்டு மடங்காக இருக்கும்.
இந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய, 2040-க்குள், அனல் மின் நிலையங்களுக்கான நிலக்கரி தேவை, சுமார் 1500 மெட்ரிக் டன்னாக அதிகரிக்கும். கடந்த 8 ஆண்டுகளில், என்எல்சி இந்தியா நிறுவனத்தின், மின் உற்பத்தித் திறன், 2740 மெகாவாட்டிலிருந்து 6061 மெகாவாட்டாக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. மேலும், சுரங்கத்தின் திறன் ஆண்டிற்கு 30.60 மில்லியன் டன்னிலிருந்து 50.60 மில்லியன் டன்னாக உயர்த்தப்பட்டுள்ளது.
என்எல்சிஐஎல், அதன் உற்பத்தித்த் திறனில் 45%-க்கும் மேலான, அனல் மின்சக்தி மற்றும் அதன் முழு மரபுசாரா மின்சக்தி உற்பத்தியை தமிழகத்திற்கு வழங்கி வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.