தமிழ்நாட்டில் கட்சியைப் பலப்படுத்துவதற்கு மாநிலத் தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளும் பணிகள் மீது விமர்சனங்கள் இருந்தாலும், அவருக்கு பாஜக தேசியத் தலைமையின் ஆதரவு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்ணாமலையின் செயல்பாடுகளைப் பாராட்டி பாஜக முக்கியத் தலைவர் ஒருவர் கூறுகையில், "அரசியலில் புதிது என்றாலும், அடிமட்டத்தில் கட்சியைப் பலப்படுத்துவதற்கு அண்ணாமலை கடுமையான உழைக்கிறார். தமிழ்நாடு மக்கள் புதுமை விரும்புகின்றனர். அரசியல் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். அண்ணாமலை புதிய பாணியிலான அரசியல் மற்றும் புதுமையைக் கொண்டு வந்திருக்கிறார். மாநிலத்தில் கட்சியை புதிய உச்சத்துக்கு அவர் நிச்சயம் அழைத்துச் செல்வார்" என்றார்.
பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய சென்னை பயணம் குறித்து மற்றொரு மூத்த தலைவர் கூறியதாவது:
"பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்ட வரவேற்பானது, அவர்கள் பாஜகவை ஏற்றுக்கொண்டதை வெளிக்காட்டுகிறது. தமிழ்நாட்டில் பிரதமரின் பிரபலம் மேலும் அதிகரிக்கிறது. மத்திய அரசின் வளர்ச்சி மற்றும் நலத் திட்டங்கள் குறித்து மக்கள் விழிப்புணர்வுடன் உள்ளனர். மத்திய அரசின் திட்டங்களால் பயனடைவோரை பாஜக நிர்வாகிகள் சந்திக்கின்றனர்."
மற்றொரு மூத்த தலைவர் கூறுகையில், "புதிய மக்களைச் சந்திக்கும் திட்டத்தில், அண்ணாமலை நாள்தோறும் 25 புதிய வீடுகளுக்குச் சென்று மக்களிடம் உரையாடுகிறார். அங்குள்ளவர்களைச் சந்தித்து, கட்சிக்கான அவர்களது ஆதரவைத் திரட்டுகிறார்" என்றார்.
அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் முழு ஆதரவு இருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டாவும் அண்ணாமலையின் செயல்பாடுகளைப் பாராட்டுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தில்லியிலுள்ள மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், "தமிழ்நாட்டில் நிலவும் சூழல்களைக் கவனித்து வருகிறோம். எங்களது மதிப்பீட்டின்படி, மாநிலத் தலைவராக அண்ணாமலை சிறப்பாக செயலாற்றி வருகிறார். தமிழ்நாட்டில் கட்சியின் வளர்ச்சிக்கு பல்வேறு புதிய விஷயங்களை அவர் செய்து வருகிறார். அது சிலருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், கட்சியில் அது கட்சிக்குதான் பலன் சேர்க்கும்" என்றார்.