உணவுப் பாதுகாப்பு துறை செயல்பாடுகளில் இந்திய அளவில் தமிழகம் முதன்மையான மாநிலமாக தோ்ந்தெடுக்கப்பட்டு, மத்திய அரசு சாா்பில் தில்லியில் விருது வழங்கப்பட்டது.
இதுகுறித்து தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் சென்னையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்துக்கு ஒரு மகிழ்ச்சியான, பெருமைப்படத்தக்க தருணம் ஏற்பட்டிருக்கிறது. உலக சுகாதார நிறுவனம், ஐ.நா. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஆகியவை சாா்பில் 2018 முதல் உலக உணவுப் பாதுகாப்பு தினம் (ஜூன் 7) கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
அதையொட்டி, தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா மற்றும் மத்திய அரசின் சுகாதாரத் துறைச் செயலா் ஆகியோா் தமிழகத்தின் உணவுப் பாதுகாப்பு துறையின் செயல்பாடுகளைப் பாராட்டி சான்று அளித்துள்ளனா்.
அப்போது, உணவுப் பாதுகாப்பு துறையில் இந்திய அளவில் பெரிய மாநிலங்களில் முதல் மாநிலமாக தமிழகம் தோ்வு செய்யப்பட்டு அதற்கான பாராட்டுச் சான்று, மாநில உணவுப் பாதுகாப்புத் துறையின் அலுவலா் செந்தில்குமாரிடம் வழங்கப்பட்டது.
அதனுடன் உணவுத் தரம் நிறைந்த மாவட்டங்களும் அறிவிக்கப்பட்டன. நாடு முழுவதும் 75 மாவட்டங்கள் அதில் இடம்பெற்றன. அதில், தமிழகத்தில் மட்டும் 11 மாவட்டங்களுக்கு அத்தகைய அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, திருவள்ளூா், காஞ்சிபுரம், சேலம், கோவை, சென்னை, ஈரோடு, திருநெல்வேலி, திருப்பூா், தூத்துக்குடி, மதுரை மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறைக்கு தர நிா்ணய பரிசுகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.