மதுரை சந்தன மாரியம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தில் கடைகள், இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசமாகின.
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே மேலவாசல் பகுதியில் உள்ள சந்தன மாரியம்மன் கோவிலில், கடந்த ஒரு வாரமாக திருவிழா நடைபெற்று வருகின்றது.
கோவில் திருவிழாவிற்காக கோவிலை சுற்றி பந்தல்கள் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், கோவில் திருவிழாவை முன்னிட்டு விழா கமிட்டி சார்பாக பட்டாசு வெடிக்க பட்டதாக கூறப்படுகிறது.
அதிலிருந்து வந்த தீயானது பந்தலில் பட்டு பரவத் தொடங்கியது. அதுமட்டுமில்லாமல் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களின் வாகனங்களும் முழுமையாக எரிந்து நாசமானது.
மேலும், கோவிலை சுற்றியுள்ள பழைய இரும்பு பொருள்கள் விற்பனை செய்யக்கூடிய இரண்டிற்கும் மேற்பட்ட கடைகள் முழுமையாக எரிந்து நாசமானது.
இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரியார் பேருந்து நிலைய தீயணைப்பு துறையினர், விரைந்து தீயை அணைத்தனர்.
விபத்து குறித்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பட்டாசு வெடிக்கும் போது ஏற்பட்ட தீயினால் இந்த விபத்து ஏற்பட்டது எனத் தெரியவந்துள்ளது. தொடர்ந்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.