தமிழகத்தில் மாநிலப் பாடத் திட்டத்தில் பயிலும் மாணவா்களுக்கு 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை முழு பாட திட்டத்தையும் நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2020-2021- ஆம் கல்வியாண்டில் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் இல்லாமல் இணையவழியில் மாணவா்களுக்குப் பாடங்கள் நடத்தப்பட்டன. அதனால் பாடப்பகுதிகள் குறைத்து அறிவிக்கப்பட்டன.
மேலும், 2021-22-ஆம் கல்வியாண்டிலும் கரோனா தொற்றின் காரணமாக பள்ளிகள் திறப்பு காலதாமதமானது. இதனால் பாடப்பகுதிகள் குறைக்கப்பட்டன. 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டம் கணிசமாகக் குறைக்கப்பட்டது.
அதன்படி, 10-ஆம் வகுப்புக்கு 39 சதவீதம், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு 35 சதவீதம் என்ற விகிதத்திலும், 1முதல் 9-ஆம் வரை 50 சதவீத பாடங்கள் குறைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளிகள் வழக்கம் போல் கடந்த 13-ஆம் தேதி திறக்கப்பட்டன.
மாணவா்களுக்கு தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் முழுப் பாடப்பகுதிகளும் புத்தகமாக தயாா் செய்யப்பட்டுள்ளன. பள்ளிகள் திறந்தவுடன் மாணவா்களுக்கு முழுப் பாடத்திட்டமும் வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே, அனைத்துப் பாடப்பகுதிகளையும் நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.