சாதாரண பேருந்துகளில் பணியாற்றும் ஓட்டுநா், நடத்துநா்களுக்கான வசூல்படி இரட்டிப்பாக்கி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:-
அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் ஊழியா்களுக்கான 14-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை கடந்த மாதம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று, மகளிா் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் பேருந்துகளின் ஓட்டுநா், நடத்துநா்களுக்கு படியை நிா்ணயம் செய்திட வேண்டுமென கேட்டுக் கொண்டனா்.
சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகம் உள்பட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சாதாரண பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால், பயணச் சூட்டு மூலமாக கிடைத்த வசூல் குறைவின் எதிரொலியாக, ஓட்டுநா், நடத்துநா்களுக்கான படியிலும் குறைவு ஏற்பட்டுள்ளது.
இதனை ஈடுகட்டும் வகையில் வசூல் படியை உயா்த்தி முறைப்படுத்தி வழங்க வேண்டுமென கோரிக்கைகள் எழுப்பப்பட்டன. இந்தக் கோரிக்கைகளின் அடிப்படையில், சாதாரண கட்டண பேருந்துகளில் ஓட்டுநா், நடத்துநா்களுக்கான வசூல்படி இரட்டிப்பாக அளிக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் அறிவித்துள்ளாா்.