தஞ்சாவூர் அருகே மாமியார் வீட்டின் அருகே தேநீர் குடிக்கச் சென்ற ரௌடி மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், சாலியமங்கலம் அருகே உள்ள களஞ்சேரியை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி (35). இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், கும்பகோணம் அருகே கொரநாட்டு கருப்பூரில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு வந்துள்ளார். மேலும், மாமியார் வீட்டு அருகில் உள்ள தேநீர் கடையில், தேநீர் குடிக்கச் சென்றபோது புண்ணிய மூர்த்தியை 4 பேர் கொண்ட மர்ம கும்பல் சரமாரியாக வெட்டியுள்ளனர். இரத்த வெள்ளத்தில் விழுந்த புண்ணியமூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையும் படிக்க | பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்: போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கும்பகோணம் டிஎஸ்பி அசோகன் மற்றும் தாலுக்கா காவலர்கள் புண்ணியமூர்த்தியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கும்பகோணம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .
இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக கும்பகோணம் தாலுக்கா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும், முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா அல்லது வேறு எதுவும் காரணங்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வரும் போலீசார், தப்பியோடியா கொலையாளிகளை தேடி வருகின்றனர்.