டியூசன் எடுக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
இடமாறுதலுக்கான கோரிக்கை ரத்தானது தொடர்பாக தஞ்சாவூரை சேர்ந்த ராதா என்பவர் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கூறியதாவது:
“ஏழை, நடுத்தர குடும்பத்தில் இருந்து வரும் மாணவர்களுக்கு தரமான கல்வியை அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வழங்குகிறார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
தனியார் கல்வி நிறுவனங்களுக்கு போட்டியாகக் கூட அரசுப் பள்ளிகளை உருவாக்க முடியாத நிலையே உள்ளது.
டியூசன் எடுப்பது ஆசிரியர் சமூகத்தில் புற்றுநோய் போல் பரவி பணம் சம்பாதிக்கும் பேராசையை அதிகரிக்கிறது.
தற்போதைய கல்வித்துறையின் நிலைமை நிச்சயமாக சிறந்த செயல்பாட்டிற்கு உகந்ததாக இல்லை. கல்வித் துறையில் இருக்கும் முறைகேடுகள், முரண்பாடுகள் உற்றுநோக்கப்பட வேண்டும்.
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தனியாக டியூசன் நடத்துவது போன்ற புகார் ஆவணங்களை சேகரித்து, மாவட்டம் தோறும் குழுவை ஏற்படுத்தி துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.”