காங்கயம்: சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கண்ணாடிக் குவளையில் உப்பு, நீர், நாணயங்கள், சிவலிங்கம் வைத்து பூஜை நடத்தப்பட்டது.
சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கண்ணாடி குவளையில் உப்பு, நீர், நாணயங்கள், கபாலீஸ்வரர் என்ற சிவலிங்கம் ஆகியவை வைத்து பூஜிக்கப்படுகிறது. காங்கயம் அடுத்துள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி திருக்கோயில், கொங்கு மண்டலத்தில் உள்ள முருகப் பெருமான் குடிகொண்டு அருள்பாலிக்கும் கோயில்களில் முக்கியமான கோயிலாகும். சிவவாக்கிய சித்தர் அருள்பெற்ற ஸ்தலமாகவும், விநாயகப் பெருமான் முருகனை வழிபடும் ஸ்தலமாகவும் விளங்குகிறது.
வேறு எந்தக் கோயிலுக்கும் இல்லாத சிறப்பு இந்தக் கோயிலுக்கு உள்ளது. அது இங்குள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டியாகும்.
இதையும் படிக்க | காஞ்சிபுரத்தின் மேயர் வேட்பாளராக எம்.மகாலெட்சுமி யுவராஜ் அறிவிப்பு
முருகப் பெருமானே பக்தர்களின் கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளை சுட்டிக் காட்டி அதை உத்தரவு பெட்டியில் வைக்க ஆணையிடுவார். அவ்வாறு உத்தரவு பெற்ற பக்தர் கோயில் நிர்வாகத்தை அணுகி விபரத்தை கூறினால் மூலவர் முன்பு பூப்போட்டு உத்தரவு கேட்டு அதன் பின்னர் அந்தப் பொருள் பெட்டியில் வைக்கப்படுவது வழக்கம்.
இவ்வாறு உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருளுக்கு கால நிர்ணயம் ஏதும் கிடையாது. அடுத்ததொரு பொருள் பக்தரின் கனவில் உத்தரவாகும் வரை பெட்டியில் வைக்கப்பட்டு பூஜிக்கப்படும்.
இவ்வாறு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் பொருள் ஏதாவது ஒரு வகையில் சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். எந்தப் பொருள் வைக்கப்படுகிறதோ, அது ஏதாவது ஒரு வகையில் சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வந்திருக்கிறது. அந்த தாக்கமானது நேர்மறையாகவும் இருக்கலாம், எதிர்மறையானதாகவும் இருக்கலாம்.
கடந்த மாதம் பிப்ரவரி 26ம் தேதி முதல் கோவை சிங்கநல்லூரைச் சேர்ந்த மாசிலாமணி என்ற பக்தரின் கனவில் உத்தரவான திருநீறு, மஞ்சள், குங்குமம் வைத்து பூஜிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று (மார்ச் 3) முதல் கோகுல்ராஜ் என்ற பக்தரின் கனவில் உத்தரவான கண்ணாடி குவளையில் உப்பு, நீர், நாணயங்கள், கபாலீஸ்வரர் என்ற சிவலிங்கம் ஆகியன வைத்து பூஜிக்கப்பகிறது. இதன் தாக்கம் போகப் போகத்தான் தெரிய வரும்.
ஏற்கனவே கடந்த மாதம் 26 ம் தேதிதான் உத்தரவு பொருள் மாறியது. தற்போது 6 நாட்களில் மீண்டும் மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.