விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி மேயர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் உறுப்பினர் சங்கீதா இன்பம், மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் தனது வேட்புமனுவினைத் தாக்கல் செய்தார். வேறுயாரும் போட்டியிடாததால் சங்கீதா இன்பம் போட்டியின்றி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற பதவியேற்பு விழாவில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மேயரான சங்கீதா இன்பத்திற்கு அங்கி அணிவிக்கப்பட்டு அவரிடம் வெள்ளி செங்கோலை மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி வழங்கினார்.
பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக வேட்பாளர்கள் வெற்றிபெற தோழமை கட்சியினர் பெரிதும் உதவினர். திமுக கூட்டணி கட்சி வெற்றி பெற திமுக உள்ளிட்ட கூட்டணிகள் சிறப்பாக தேர்தல் பணியாற்றினார்கள். இந்த வெற்றி, முதல்வர் ஸ்டாலினின் சிறப்பான ஆட்சிக்கு கிடைத்த வெற்றியாகும் என்றார்.