விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து சசிகலா மரியாதை செலுத்தினார்.
ராஜபாளையத்தில் சசிகலாவை வரவேற்கும் இடத்தில் அதிமுக கொடிகள் சாலை முழுவதும் கட்டப்பட்டு தொண்டர்கள் கொடியுடன் வரவேற்பளித்தனர். சசிகலா காரில் வந்தவுடன் சசிகலா கார் முன்பு கூடிய தொண்டர்கள் தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க ஏற்பாடு செய்து இருந்தனர்.
ஆனால், சசிகலா காரை விட்டு இறங்காமல் சென்றதால் காரை மறித்து முற்றுகையிட்டு தேவர் சிலைக்கு மாலை அணிவித்தால் மட்டுமே காருக்கு வழி விடுவோம் என்ற தொண்டர்கள் சாலையில் படுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து காவல் துறையினர் தொண்டர்களை அப்புறப்படுத்தினர். இதனால் தொண்டர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் 20 நிமிடத்துக்கு மேலாக போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து சசிகலா மீண்டும் காரை திருப்பி வந்து, தேவர் சிலைக்கு மாலை அணிவித்தார். இதன்பிறகே தொண்டர்கள் அவரை வழியனுப்பி வைத்தனர்.
இதனால், ராஜபாளையம் தென்காசி சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.