வடகிழக்கு பருவமழை பாதிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் சீரமைப்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ள முதல்வர் உத்தரவு

தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுளளார். 
வடகிழக்கு பருவமழை பாதிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் சீரமைப்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ள முதல்வர் உத்தரவு

தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுளளார். 
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (7.3.2022) தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைத்திடும் வகையில், பிரையண்ட் நகர், மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் 19 கோடியே 45 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், சுப்பையாபுரம், மாசிலாமணிபுரம் தெருக்களில் 14 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், மேக் கார்டன், குமரன் நகர், சத்தியா நகர், அம்பேத்கர் நகர் மற்றும் சுந்தரவேல்புரம் பகுதிகளில் 11 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். வடகிழக்கு பருவமழையால் தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் கடந்த 2.12.2021 அன்று நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்து, சீரமைப்புப் பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
அதன் தொடர்ச்சியாக, முதலமைச்சர் இன்று தூத்துக்குடி மாவட்டம், பிரையண்ட் நகரில் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்கும் வகையில், தூத்துக்குடி சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ், 9 கோடியே 25 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பிரையண்ட் நகர் மேற்கு பிரதான சாலையின் மேற்குப் பகுதி வடிகால் மற்றும் பிரையண்ட் நகர் மேற்குப் பகுதி தெருக்கள் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் இணைப்பு வடிகால் அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

வடிகால் அமைக்கும் பணியில் மொத்தம் 6.237 கிலோ மீட்டரில் 3.560 கிலோ மீட்டர் பணிகள் நிறைவடைந்துள்ளது. தொடர்ந்து, 10 கோடியே 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பிரையண்ட் நகர் மேற்கு பிரதான சாலையின் கிழக்கு பகுதி பிரதான வடிகால் மற்றும் சிதம்பர நகர், பிரையண்ட் நகர் மத்திய பகுதி தெருக்கள் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் கட்டுமானப் பணிகள் குறித்து முதல்வர் அலுவலர்களிடம் கேட்டறிந்தார். வடிகால் அமைக்கும் பணியில் மொத்தம் 8.208 கிலோ மீட்டரில் 5.950 கிலோ மீட்டர் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது.
மேலும், 14 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சுப்பையாபுரம் முதல் மாநில நெடுஞ்சாலை-176 வரையிலான பிரதான வடிகால் மற்றும் சுப்பையாபுரம், மாசிலாமணிபுரம் தெருக்கள் முழுவதும் நடைபெற்று வரும் பிரதான வடிகால் அமைக்கும் பணிகள் குறித்து முதல்வர் அலுவலர்களிடம் கேட்டறிந்தார். வடிகால் அமைக்கும் பணியில் மொத்தம் 8.460 கிலோ மீட்டரில் 2.600 கிலோ மீட்டர் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, 11 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், மேக் கார்டன், குமரன் நகர், சத்தியா நகர், அம்பேத்கர் நகர் மற்றும் சுந்தரவேல்புரம் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இப்பணியில் மொத்தம் 8.332 கிலோ மீட்டரில், 4.400 கிலோ மீட்டர் பணிகள் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகளை மழைக்காலத்திற்கு முன்பாக விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டதோடு, சாலைப் பணிகள் நடைபெறும்போது தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொண்டு சாலையின் தரத்தினை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தினார். 
இந்த ஆய்வின்போது, அப்பகுதி மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைத்திட விரைந்து நடவடிக்கை மேற்கொண்டதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டு, கோரிக்கை மனுக்களையும் அளத்தனர். இந்த நிகழ்வின்போது, அமைச்சர்கள் பி.கீதாஜீவன், அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் உடனிருந்தனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com