சிறையில் சொகுசு வசதிகள் செய்து தர லஞ்சம் தந்ததாக தொடரப்பட்ட வழக்கில், சசிகலா, இளவரசி உள்பட 4 பேருக்கு முன்ஜாமீன் அளித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தர்விட்டுளள்து.
சிறைத் துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகத் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று இருவரும் ஆஜரான நிலையில், முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர்.
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, தாங்கள் அடைக்கப்பட்டிருந்த சிறையில், சொகுசு வசதிகள் செய்து தரக் கோரி சிறைத் துறை அதிகாரிகளுக்கு ரூ. 2 கோடி லஞ்சம் கொடுத்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சசிகலா மற்றும் இளவரசி உள்பட 4 பேர் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
முன் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிமன்றம், சசிகலா, இளவரசி மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் சுரேஷ், கஜராஜ மகனூர் ஆகிய நால்வருக்கும் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டில், சிறைத் துறை அதிகாரியாக இருந்த டிஐஜி ரூபா, சசிகலா தரப்பில், சிறையில் சொகுசு வசதிகள் செய்து தரக் கோரி சிறைத் துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக வழக்குப் பதிவு செய்திருநத்து குறப்பிடத்தக்கது.