மழைநீர் வடிகால் பணிகள்: முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்யும் முதல்வர் ஸ்டாலின்
மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்யும் முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில்,

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (17.3.2022) கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளை சீரமைத்திட 9 கோடியே 81 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வடகிழக்கு பருவமழையால் கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சென்னை மற்றும் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழ்நாடு முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்து, சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை துரிதமாக அகற்றிடவும், நிவாரண நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டு, பணிகள் துரிதமாக நடைபெற்றன.

அதன் தொடர்ச்சியாக, சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளிலிருந்து நிரந்தர தீர்வு காணும் வகையில் ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப் பணி அலுவலர் திருப்புகழ் தலைமையில் வெள்ள மேலாண்மை குழு அமைத்து தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டார்.

மேலும், வருகின்ற பருவமழைக் காலங்களில் மழை வெள்ளப் பாதிப்புகள் ஏற்படாத வகையில் கடந்த ஆண்டுகளில் அதிக அளவில் நீர் தேங்கிய இடங்களில் மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்து திட்டப் பணிகளை உடனடியாக தொடங்கிட உத்தரவிட்டார்.

அதனடிப்படையில், தமிழ்நாடு முதலமைச்சர் இன்று, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட இராயபுரம் மண்டலம், வார்டு-58, வேப்பேரி நெடுஞ்சாலையில் 750 மீட்டர் நீளத்திற்கு 1 கோடியே 80 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளையும்; திரு.வி.க. நகர் மண்டலம், வார்டு – 73, புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் 790 மீட்டர் நீளத்திற்கு 3 கோடியே 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளையும்; வார்டு-74, பெரம்பூர் நெடுஞ்சாலை தெற்குப் பகுதியில், 880 மீட்டர் நீளத்திற்கு 3 கோடியே 70 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளையும்; மயிலாப்பூர் இரயில்வே நிலையம் அருகில், வார்டு-126, ராமாராவ் சாலையில் 500 மீட்டர் நீளத்திற்கு 38 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளையும்; தேனாம்பேட்டை மண்டலம், வார்டு – 123, தேவநாதன் தெருவில் 300 மீட்டர் நீளத்திற்கு 73 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளையும், பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது, தமிழ்நாடு முதலமைச்சர் வருகின்ற பருவமழை காலத்தில் வெள்ள பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்நிகழ்வின்போது இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு. பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் இ.பரந்தாமன், தாயகம் கவி, த.வேலு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா,  துணை மேயர் மு.மகேஷ் குமார், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங்பேடி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com