திருச்சி: திருச்சி, தொழிலதிபர் ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை தொடங்கியுள்ளது, அவை குறித்த தகவல் தெரிந்தவர்கள் குறிப்பிட்ட எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் குற்றப்புலனாய்வுத்துறை அறிவித்துள்ளது.
திருச்சி தொழிலதிபரும், திமுக முதன்மைச்செயலாளர் மற்றும் அமைச்சருமான கே. என். நேருவின் இளைய சகோதரர் ராமஜெயம், கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி கல்லணை சாலையில் உள்ள பொன்னி டெல்டா பகுதியில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இந்த கொலை வழக்கில் குற்றவாளிகள் யாரும் கண்டுபிடிக்காத நிலையில், தனிப்படை விசாரணை,சிபிசிஐ விசாரணைகளைத் தொடர்ந்து இந்த வழக்கு குற்றப்புலனாய்வுப் பிரிவு (சிபிஐக்கு) மாற்றபட்டது.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, சென்ன குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை காவல் துறை இயக்குநர் ஷாகில் அக்தர் மேற்பார்வையில், காவல் கண்காணிப்பாளர்(எஸ்பி) எஸ். ஜெயக்குமார், துணைக்காவல்கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.) மதன் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தனிப்படையினர் கடந்த சில நாள்களாவே விசாரணையை தொடங்கி மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், கல்லணை சாலையில், ராமஜெயம் கொலை செய்யப்பட்டு உடல் கிடந்த இடம் மற்றும் அவர் வீட்டிலிருந்து நடை பயிற்சி சென்ற இடம் ஆகியவற்றை பார்வையிட்டு, அவரை அதிகாலை வேளையில் நடைபயிற்சியின்போது பார்த்த நபர்களிடமும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தியுள்ளது.
இந்த நிலையில் எஸ்.பி ஜெயக்குமார், ராமஜெயம் கொலை சம்பந்தமான விசாரணையில் குற்றவாளிகள் பற்றிய விவரங்கள் ஏதேனும் தெரிந்தால் காவல்துறை அதிகாரிகளை நேரிலோ அல்லது 9080616241,9498120467,7094012599 என்ற செல்போன் எண்களிலோ அல்லது rmathan1970@gmail.com என்ற இணைய முகவரியிலோ தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என சிபிஐ சார்பில் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சரியான தகவல் தருபவர்களுக்கு தக்க சன்மானம் அளிக்கப்படும். தகவல் தருபவர்களின் விவரம் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டள்ளது.
இந்தக் கொலை சம்பவம் நடந்து கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் கடந்த நிலையில், கொலைதான் என உறுதிசெய்த நிலையிலும் குற்றவாளிகளை உறுதிப்படுத்த முடியவில்லை.
இந்த நிலையில், காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் 3 டிஎஸ்பிக்கள் மற்றும் 5 ஆய்வாளர்கள் உள்ளிட்ட சுமார் 40 முதல் 50 பேர் கொண்ட 5 தனிப்படை அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்துவருகிறது. ஒவ்வொரு குழுவும் வெவ்வேறு கோணங்களில் விசாரணை நடத்த உள்ளனர்.
இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் கூறுகையில், பொதுவாக இந்த கொலை கொடூரமாக நடந்து உள்ளது. இதனை யாரும் மறுக்க முடியாது. இதனைவிட சிக்கலான கொலை வழக்கில் கண்டுபிடித்து உள்ளோம். எனவே இந்த வழக்கில் விரைவில் குற்றவாளிகளை பிடித்து விடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.
குற்றவாளிகளை பிடிக்க பொதுமக்களும் பத்திரிக்கையாளர்களும் ஒத்துழைப்பு தாருங்கள். தங்களுக்கு கிடைக்கும் எந்த ஒரு தகவல்களையும் உடனடியாக எனக்கு தெரியப்படுத்துங்கள். விசாரணை வெளிப்படையாகவே நடைபெறும். இந்த வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் 15 நாள்களுக்கு ஒரு முறை அறிக்கை தாக்கல் செய்ய இருக்கிறோம் என்றார்.