தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை  2022-23: முக்கிய அம்சங்கள்...!

தமிழக அரசின் 2022-23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை இன்று வெள்ளிக்கிழமை (மார்ச்.18) காலை 10 மணிக்கு நிதியமைச்சா் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வருகிறார்.
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை  2022-23: முக்கிய அம்சங்கள்...!


தமிழக அரசின் 2022-23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை இன்று வெள்ளிக்கிழமை (மார்ச்.18) காலை 10 மணிக்கு நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வருகிறார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்த பிறகு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது நிதிநிலை அறிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: 

* பட்ஜெட் உரையில் சில பகுதிகளை முதன் முறையாக ஆங்கிலத்தில் வாசித்தார். 

* புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட 6 மாவட்டங்கள் உள்ளிட்ட 19 மாவட்டங்களிலுள்ள அரசு மருத்துவமனைகள் ரூ.1,019 கோடி செலவில் மாவட்டத் தலைமை மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும். 

*  உயர்தர மனநலச் சேவைகளை வழங்குவதற்காக, கீழ்ப்பாக்கத்திலுள்ள மனநல மருத்துவமனையை தமிழ்நாடு மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் என்ற உயர்நிலை அமைப்பாக மேம்படுத்திட அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு, முதல் கட்டமாக ரூ.40 கோடி வழங்கப்படும்.

* காஞ்சிபுரம் அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் 750 படுக்கை வசதிகளுடைய, தன்னாட்சி அதிகாரம் பெற்ற உயர்தர மருத்துவமனையாக மேலும் தரம் உயர்த்தப்படும். இதற்காக ரூ.100 கோடி  மதிப்பீட்டில், உலக வங்கி மற்றும் தேசிய சுகாதார இயக்க நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும்.

* தேசிய ஊரக சுகாதார இயக்கத் திட்டத்திற்கு ரூ.1,906 கோடி ஒதுக்கீடு.

*  அவசர ஊர்தி சேவைகளுக்கு ரூ.304 கோடி ஒதுக்கீடு.

*  டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்திற்கு ரூ.817 கோடி ஒதுக்கீடு.

*  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ.17,901.73 கோடி ஒதுக்கீடு.

* அரசுத்துறைகளில் அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்களை சேகரித்து கண்காணிக்க சொத்து மேலாண்மை மென்பொருள் உருவாக்கப்படும். 

* மின்சாரத்தில் இயங்கும் 500 பேருந்துகளும், டீசலில் இயங்கும் 2213 பேருந்துகளும் வாங்கப்படும். 

* தமிழகத்தில் திறன்மிக்க மனித வளத்தை மேலும் மேம்படுத்தி அறிவுசார் பொருளாதாரத்தை உருவாக்குவது அரசின் தொலைநோக்கு திட்டமாகும். 

* உலகளாவிய பங்களிப்புடன் ஒரு அறிவுசார் நகரம் உருவாக்கப்படும். இது உலகில் புகழ்பெற்ற பல்கலைக்கழங்களின் கிளைகளை கொண்டிருக்கும். 

* ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள, திறன் பயிற்சி மையங்கள், அறிவுசார் தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பிரிவுகளை இந்த அறிவுசார் நகரம் கொண்டிருக்கும். 

* தமிழத்தில் டிட்கோ, சிப்காட், டான்ஜெட்கோ போன்ற அரசு பொது நிறுவனங்களுடன் இணைந்து மாநில பல்கலைக்கழங்கள் தங்கள் வளாகங்களில் ஆராய்ச்சி பூங்காக்கள் அமைக்க ஊக்குவிக்கப்படும்.

* தமிழகத்தில் உயர்கல்வி சேர்க்கை விகிதம் உயர்ந்து வருகிறது. அரசு கல்லூரி, பல்தொழில்நுட்ப கல்லூரிகளில் கட்டமைப்பு மேம்படுத்துவது அவசியம்.

* அடுத்த 5 ஆண்டில் ரூ.1000 கோடியில் சிறப்பு திட்டம் உருவாக்கி புதிய வகுப்பறை, விடுதி, ஆய்வகம், திறன்மிகு வகுப்பறை உருவாக்கப்படும். இதற்காக இந்த ஆண்டில் ரூ.250 கோடி வழங்கப்பட்டுள்ளது.

* முன்னுரிமை அடிப்படையில் 7.5 சதவீதம் ஒதுக்கீட்டில் கல்லூரிகளில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் பல்வேறு கட்டணத்துக்காக ரூ.201 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

* தமிழகத்தில் ஏற்றுமதியை மேம்படுத்த ரூ.100 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு. 

* இல்லம் தேடி கல்வித்திட்டம் இந்த ஆண்டு செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு. 

* சென்னை நந்தம்பாக்கத்தில் ரூ.75 கோடியில் புத்தொழில் உருவாக்க மையம் அமைக்கப்படும். 

* கேவையில் கைத்தொழில் மேம்பாட்டு குழுவம் அமைக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு. 

* கோவை, வேலூர், பெரம்பலூரில் புதிய தொழில் பூங்காக்கக்கள் அமைக்கப்படும். 

* சிதிலமடைந்த 1000 ஆண்டுகள் பழமையான கோயில்களை புணரமைக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு.

*  இந்திய சமய அறநிலைத்துறைக்கு ரூ.387 கோடி ஒதுக்கீடு.

* தமிழகத்தில் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட கிழக்கு கடற்கரை சாலை ஆறு வழிச் சாலையாக மாற்றப்படும்

* மாநகர பேருந்துகளில் மகளிர் இலவச பேருந்து பயணம் செய்யும் திட்டத்திற்கு ரூ.1520 கோடி மானியம். 

 * துரைமுகம் - மதுரவாயல் உயர்மட்ட சாலை திட்டத்திற்கு ரூ.5770 கோடி ஒதுக்கீடு.

 * நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் அடிப்படை தேவைகளா நிறைவு செய்ய ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு. 

 * நகர்ப்புற வளர்ச்சித்துறைக்கு ரூ.8737 கோடி ஒதுக்கீடு.

 *  பிரதமரின் வீடு வசதித்திட்டத்திற்கு ரூ.7,300 கோடி ஒதுக்கீடு. 

 * ஏழை மக்களுக்கு அமருத் திட்டத்தின் கீழ் வீடு கட்ட ரூ.2030 கோடி ஒதுக்கீடு.

 * 100 நாள்கள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ரூ.2800 கோடி ஒதுக்கீடு. 

 * சென்னையை மேம்படுத்தும் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு.

 * 149 சமத்துவபுரங்களை சீரமைக்க ரூ.190 கோடி ஒதுக்கீடு. 

 * ஒருங்கிணைந்த குழந்த வளர்ப்பு திட்டத்திற்கு ரூ.2,542 கோடி ஒதுக்கீடு.

 * அரசு பள்ளியில் பயின்று  உயர்கல்வி செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும். பெண்கள் உயர்க்கல்வி இடைநிற்றலை தடுக்க கல்லூரியில் சேர்ந்து அவர்கள் படிப்பு முடியும் வரை மாதம் ரூ.1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். அம்மாணவிகள் பிற திட்டங்களில் உதவித்தொகை பெற்றிருந்தாலும் வழங்கப்படும். 

* சட்டப்பேரவையின் கேள்வி நேரத்தை நேரடி ஒளிபரப்புச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

* அரசு சாரா தனியார் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை இலவச பாடப் புத்தகங்கள் வழங்கப்படும். இதற்காக ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு.

* புதிதாக 18 ஆயிரம் வகுப்பறைகள் கட்ட ரூ.13,000 கோடி நிதி ஒதுக்கீடு.

* அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்தும் வகையில், அன்பழகன் பெயரில் திட்டம். 

*அரசு கல்லூரிகளின் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.250 கோடி ஒதுக்கீடு.

* தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.36,895.89 கோடி ஒதுக்கீடு.
 
* சுய உதவிக்குழுக்களுக்கான கடன், விவசாயிகளுக்கான பயிர்கடன் வழங்க ரூ.4,130 கோடி ஒதுக்கீடு

* சமூக ஊடகங்களில் தவறான பிரசாரத்தை தடுக்க சமூக ஊடக சிறப்பு மையம் அமைக்கப்படும்.

* முதியோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களுக்கு ரூ.4,816 கோடி நிதி ஒதுக்கீடு.

* விழுப்புரம், ராமநாதபுரத்தில் ரூ.10 கோடியில் தொல்பொருள்களை வைக்க அருங்காட்சியகம் அமைக்கப்படும்

* சென்னை அருகே தாவரவயில் பூங்கா ரூ.300 கோடியில் அமைக்கப்படும். * கிண்டி சிறுவர் பூங்கா மேம்படுத்தப்படும். 

* தந்தை பெரியாரின் எழுத்துகளை எட்டுத்திக்கும் எடுத்து செல்ல பெரியாரின் சிந்தனை அடங்கிய தொகுப்பு 21 இந்திய உலக மொழிகளில் அச்சு மற்றும் டிஜிட்டல் வழியில் வெளியிடப்படும். இதற்காக 5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* தமிழ்மொழிக்கும் பிற சர்வதேச மொழிகளுக்கும் இடையேயுள்ள தொடர்பை ஆராய குழு அமைக்கப்படும். அகர முதலி உருவாக்கும் திட்டத்திற்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு.

* தமிழ் மொழியின் தொன்மை, செம்மையை நிலைநாட்டிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்!

* தமிழ் வளர்ச்சித் துறைக்கு பட்ஜெட்டில் ரூ.82.86 கோடி நிதி ஒதுக்கீடு

* நீர்நிலை பாதுகாப்பு மற்றும் அரசு நிலங்களை மீட்கும் பணிகளுக்காக ரூ.50 கோடி ஒதுக்கீடு.

* வருவாய் பற்றாக்குறை கடந்த ஓராண்டில் ரூ.7ஆயிரம் கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.

* வெள்ளத்தடுப்பு பணிகளுக்காக முதற்கட்டமாக ரூ.500 கோடி ஒதுக்கீடு. 

* தமிழகத்திலுள்ள 64 அணைகளை புனரமைக்க ரூ.1,064 கோடி ஒதுக்கீடு.

* தமிழக அரசின் நீர்வளத்துறைக்கு ரூ.7,338.36 கோடி ஒதுக்கீடு.

* வட்டியில்லா பயிர்க்கடன் திட்டத்திற்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு.

* வரும் நிதியாண்டில் மாநில மொத்த உற்பத்தியில் நிதிப் பற்றாக்குறை 4.61%லிருந்து 3.80 ஆக குறையும்.

* வருவாய் பற்றாக்குறை வரும் ஆண்டில் 7 ஆயிரம் கோடிக்கு மேல் குறைய வாய்ப்புள்ளது.

* ஜிஎஸ்டி இழப்பீடு நடைமுறை முடிவுக்கு வந்தபின் 20 ஆயிரம் கோடி வரி இழப்பை தமிழ்நாடு சந்திக்கும்.

* ஜி.எஸ்.டி வந்தபிறகு மாநில அரசின் வரி வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது.

* ஜி.எஸ்.டி இழப்பீடு நடைமுறையை மேலும் 2 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும்

* கொற்கையில் ரூ.5 கோடியில் ஆழ்கடல் ஆய்வு மேற்கொள்ளப்படும்

* தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்காக ரூ.496 கோடி ஒதுக்கீடு.

* வானிலை முன்னறிவிப்பு கட்டமைப்பை உருவாக்க ரூ.10 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

* இரண்டு ரேடார்கள், 100 தானியங்கி வானிலை மையங்கள், 400 தானியங்கி மழை மானிகள் அமைக்கப்படும்.

*  ரூ.20 கோடியில் வள்ளலார் கால்நடை பாதுகாப்பகங்கள் அமைக்கப்படும்.

* ஆதரவில்லாத, கைவிடப்பட்ட விலங்குகளை பராமரிக்க வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் ரூ.20கோடி.

* தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறைக்கு ரூ.849 கோடி நிதி ஒதுக்கீடு.

* ஆண்டுதோறும் 4 இலக்கிய திருவிழாக்கள் நடத்த ரூ.5.6 கோடி ஒதுக்கீடு. 

* மாணவர்களுக்கு இலவச சைக்கிள் திட்டத்திறிகு ரூ.1062 கோடி ஒதுக்கீடு.

* எம்ஜிஆர் சத்துணவு திட்டத்திற்கு ரூ.1949 கோடி ஒதுக்கீடு.

* சமூக நலத்துறைக்கு ரூ.5922.40 கோடி ஒதுக்கீடு.

* முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்திற்கு ரூ.1540 கோடி ஒதுக்கீடு.   

* வரையாடு பாதுகாப்பு திட்டத்திற்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு.

*  தமிழக அரசின் ஒலிம்பிக் தங்கப்பதக்கம் தேடல் திட்டத்திற்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு. 

*  சென்னையில் சதுரங்க ஒலிம்பியாட் நடைபெறுகிறது. இதில், 150 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். 

* விளையாட்டுத்துறைக்கு ரூ.293 கோடி ஒதுக்கீடு. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com