
தமிழக பட்ஜெட் உரை நிறைவையடுத்து நாளை(சனிக்கிழமை) காலை 10 மணிக்கு சட்டப்பேரவை ஒத்திவைக்கப்படுவதாக பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்தார்.
தமிழக அரசின் 2022-23 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்து உரையாற்றினார். துறை ரீதியாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட அவர், ஒரு மணி நேரம் 50 நிமிடங்கள் பட்ஜெட் உரையாற்றினார்.
இறுதியாக முக்கிய குறிப்புகளை ஆங்கிலத்தில் கூறினார். 'மாநில நிதிநிலை குறிப்புகளை ஆங்கிலத்தில் அறிவித்தால் உலக மற்றும் தேசிய ஊடகங்களுக்கு சென்று சேரும் என்பதால் சில அறிவிப்புகளை ஆங்கிலத்தில் குறிப்பிடுகிறேன்' என்று குறிப்பிட்டார்.
பட்ஜெட் உரை நிறைவையடுத்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த பேரவைத் தலைவர் அப்பாவு நாளை(சனிக்கிழமை) காலை 10 மணி வரை பேரவை ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார்.
நாளைய தினம் பேரவையில் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...